Tuesday, July 28, 2009

சொல்லுக்குள் சொல்


வார்த்தைக்குள் வார்த்தை
விடையைத் தந்தது
மழைக்குக் குடை
கைப்பிடியைப் போல்

நிம்மதி
மதியால் தேடு
வாழ்க்கை
கையால் தேடு
தொடங்கி விட்டேன்
தொடர்ந்து கூறு
எமக்குள் சில
உம்மிடம் பல

கண்டுபிடி
காட்சிப் பொருளாக்கு
கண்விழித்து
காத்திருக்கின்றேன்.




Monday, July 27, 2009

சூரிய ஒளி



உன் பார்வையில்
உலகம் ஒளிர் விட்டு
பிரகாசிக்கிறதே
எப்படி





வானத்தை பார்த்து
நிலா சொன்னது
அது என் ஒளியல்ல
சூரியனின் ஒளி


மனைவி புன்னகையோடு
கணவனைப் பார்த்தாள்
அவள் முகத்தில்
சூரிய ஒளி

Sunday, July 26, 2009

பாலர் பள்ளி அமைக்க


மலேசியத் தமிழ் அற வாரியம் 14-02-2003 ல் தனித்தன்மையுடன் சமூக மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.தமிழ்க் கல்வியைக் கருப்பொருளாக கொண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வித்துறையில் மேம்பாடு காண பல செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் பாலர் பள்ளித்திட்டத்தையும் அதன் பணிகளில் ஒன்றாக செயல் படுத்தி வருகின்றது.

2006ல் தொடங்கி 9 பாலர் பள்ளிகளை தேர்வு செய்து,தேவையான வகுப்பறைத் தளவாடப் பொருட்கள் மற்றும் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.

தற்பொழுது 2009ல் 14 பாலர் பள்ளிகளுக்கு மலேசியத் தமிழ் அறவாரியம் ஆதரவு வழங்கி வருகின்றது.


01.தமிழ்ப்பள்ளி எடின்பெர்க் பாலர் பள்ளி
02.தமிழ்ப்பள்ளி சிகாம்புட் பாலர் பள்ளி
03.தமிழ்ப்பள்ளி அப்பர் பாலர் பள்ளி
04.தமிழ்ப்பள்ளி மேரு சாலை,கிள்ளான் பாலர் பள்ளி
05.தமிழ்ப்பள்ளி மகாத்மா காந்தி கலாசாலை,சுங்கை சிப்புட்,பாலர் பள்ளி.
06.தமிழ்ப்பள்ளி தம்புசாமி செந்தூள் பாலர் பள்ளி.
07.தமிழ்ப்பள்ளி மிட்லேண்ட்ஸ் பாலர் பள்ளி
08.தமிழ்ப்பள்ளி புக்கிட் ஜாலில் பாலர் பள்ளி
09.தமிழ்ப்பள்ளி செமெந்தான் மெந்தகாப்.பகாங்,பாலர் பள்ளி
10.தமிழ்ப்பள்ளி எடென்செர் மெந்தகாப்,பகாங்,பாலர் பள்ளி
11.தமிழ்ப்பள்ளி மெந்தகாப் தோட்டம்,பகாங்,பாலர் பள்ளி
12.சுப்ரமணியர் ஆலயம் பண்டார் சன்வே,பாலர் பள்ளி
13.கரு மாரியம்மன் ஆலயம்,சிரம்பான்,பாலர் பள்ளி
14.பால தபாவனம் ஆசிரமம் பாடாங் ஜாவா,பாலர் பள்ளி


புதிதாக தொடங்கவிருக்கும் பாலர் பள்ளிகள்

01.தமிழ்ப்பள்ளி பாசிர் கூடாங்,ஜோகூர் பாலர் பள்ளி
02.தமிழ்ப்பள்ளி ரிவர்சைட் தோட்டம்,கோல சிலாங்கூர்,பாலர் பள்ளி

இதனை மேலும் 25 ஆக பாலர் பள்ளிகளாக உயர்த்த வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம்.

பாலர் பள்ளிகள் நடத்திவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,கோயில் நிர்வாகம்,தனி இயக்கங்கள் மலேசியத் தமிழ் அற வாரியத்தின் ஆதரவுடன் செயல்பட விரும்பினால் எங்களுடன் தொடர்பு கொள்வதை வரவேற்கின்றோம்.

தொடர்புக்கு : சு.காந்தியப்பன். பி.பி.என். -012-6475135
(பாலர் பள்ளி ஒருங்கிணைப்பாள்ர்)
அலுவலகம் :03-26926533

மலேசியத் தமிழ் அறவாரியம் எவ்வகையில் உதவ முடியும் ?
01. ஒரு புதிய வகுப்பறை கட்டுவதற்கு
02. தேவையான புத்தகங்கள் / மேசைகள் / நாற்காலிகள்
03. தேவையான விளையாட்டுப் பொருட்கள்
04. படிப்பதற்கு தேவையான உபகரங்கள்
05. ஆசிரியர்களுக்கான பயிற்சிகள்
06. பாலர் பள்ளியின் மேற்பார்வை,கண்காணிப்பு சேவையை
மலேசியத் தமிழ் அறவாரியம் வழங்கும்

நடைபெற்ற நிகழ்வுகள்

2008
கடந்த 09-11-2008 ல் மதிய மணி 2.00 முதல் மாலை மணி 6.00 வரை
தான்சிறி கே.ஆர்.சோமா அரங்கம்,விஸ்மா துன் சம்பந்தன்,கோலாலம்பூரில்
பாலர் பள்ளி மாணவர்களின் கலை விழா'அரும்புகளின் அற்புதங்கள்' சிறப்பாக நடைபெற்றது.


2009

01. பொங்கல் விழா ( ஜனவரி)
02.திருமுறை / திருக்குறள் போட்டிகள் (மே)
03.வசந்த விழா (ஜூன்)
04.கல்விக் கருத்தரங்கு (ஜூலை)
கல்விச் சுற்றுலா - கேமரன் மலை
05.பாலர் பள்ளி கலை விழா (நவம்பர்)

வானம் அழ


வானம் அழ
பயிர்கள் சிரிக்க
ஒருவர் தியாகம்
பிறர் வாழ்க்கை


உன் பெற்றோர்க்காக
உன் உடன் பிறப்பிற்காக
உன் குடும்பத்திற்காக
உன் நாட்டிற்காக


உன் தாய்க்காக
உன் தாய்மொழிக்காக
உன் தமிழுக்காக
உன் உயிர்மூச்சை


இளைஞனே
நீ தியாகம் செய்
நாளை
நீ சரித்திரம்


Friday, July 24, 2009

நெஞ்சு வலிக்குதய்யா



(வயது முதிர் காலத்தில்
பிள்ளைகள் நலம் வாழ
பிரார்த்திக்கும் பாசமுள்ள
தந்தையின் கண்ணீர்த் துளி
காணிக்கை)



பிள்ளைகளின்
திருமணத்திற்குப் பின்
கடமை முடிந்து போன
மகிழ்ச்சி -
பெற்றோர் பெருமூச்சு

'இனிமேல்தான்
நிம்மதி இல்லை'
அனுபவசாலியின்
அன்புக்கூற்று
ஏற்க மறுத்து
ஏளனமாக
சிரித்தேன் - அன்று

உண்மைதான்
உணர்கின்றேன் - இன்று

வயது ஆறோ
ஆறு ஐந்து முப்பதோ
குழந்தைகள்
என்றும் நம்
பிள்ளைகள்தான்

வயது முதிர் காலத்தில்
தாங்கும் வலிமை
குறைந்த வேளையில்

பிள்ளைகள் சிரிப்பு
நம் ஆயுள் வாழ்வின்
நாள் நீடிப்பு
அவர்கள் சோகம்
நம் நாள் குறைப்பு

குழந்தைகளின்
சிரிப்பில்
பட்ட கடன்
தெரியவில்லை - அன்று

பிள்ளைகளின்
சோகத்தில்
மனவேதனை
தாங்கவில்லை - இன்று

சிறு சோதனையில் கூட
சோர்வு, மன உளைச்சல்

சிரிக்க மாட்டார்களா
ஏங்குகிறது மனம்
சிரிப்பதைப் போல்
நடிக்கும் பாசப்பறவைகள்
அதுவும் புரிகின்றது

நானும்
அழுது கொண்டே
சிரிக்கின்றேன்

இன்னும் எத்துணை
நாட்களுக்கு................

ஓ இறைவா...............
நெஞ்சு வலிக்குதய்யா

பிள்ளைகளை
மகிழ்வோடு
வாழ வழி செய்
வாழ விடு

உமக்கு
காணிக்கையாக
உதிரப்போகும்
என்னை
ஏற்றுக்கொள்
என்றும் தயார்

கண்ணீருடன்..

Thursday, July 23, 2009

பிணமாகும் நாம்..




பிணமாகும் நாம்
புரிந்தும்
புரியாதவர்போல்
பணத்தைத் தேடி
போராடுவதாக
நினைத்து
நடைப்பிணமாய்
அலையும் நாட்களே
இன்றைய
மனித வாழ்க்கை

நமக்குப் பின்
நம் அடிச்சுவடு
நம்மை
நினைவுப் படுத்தலே
என்றும் நிலைக்கும்
வாழ்க்கை - யோசி

Tuesday, July 14, 2009

சிலந்தி வலை


இளைஞனே
ஒன்றும் தெரியாத
புரியாத ஈக்கள்
மாட்டிக்கொண்ட இடம்
சிலந்தி வலை
மாற்று பெயர்
நா.............................
கண்ணதாசனிடம்
இரவல் வாங்கிய வரிகள்
உமக்கும் பொருந்தும்
நாளை நீ மாறுவாய்
என்னை நினைப்பாய்.
இது உறுதி.

ஓர் இடுகையில்
ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா

அறிவுப் பசிக்கு
கண்களைத் திறந்த
ஆசிரியருக்கு
மரியாதைக் கொடுங்கள்
படித்த பட்டதாரி
எழுத்தாளர்களே

நம் சமுதாயக்
மூட நம்பிக்கைகளைப்
பற்றி பெரியார்
சொல்லாததா நீர்
சொல்லிவிடப் போகின்றாய்

ஆயினும் சொல்வதை
இனியச் சொற்களால்
சொல்லுங்களேன்
இனிய எழுத்தாளர்களே